
ஜாமீனில் வந்து பல மாதங்கள் தலைமறைவாக இருந்த வேலூரை சேர்ந்த ரவுடி ஜானியை துப்பாக்கி முனையில் வேலூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வன்டறதாங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜானி. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் வேலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து அதன்பின்பு தலைமறைவானார். தலைமறைவாக உள்ள ஜானியை பிடிக்க காவல் துறையினர் பலமுறை முயற்சித்தும் பிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜானி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அத்துடன் அவரது பெயர் என்கவுண்ட்டர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் தலைமறைவாக உள்ள ஜானியை பிடிக்க வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார் உத்தரவின் பேரில் 3 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில் ரவுடி ஜானி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை காவல் துறையினர் பெங்களூருக்கு விரைந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஜானியை கைதுசெய்ய முயன்றபோது அவர் தப்பியோட முயற்சித்துள்ளார். உடனே அவரை விரட்டிப்பிடித்த போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து வேலூர் அழைத்து வருகின்றனர்.

இதனிடையே ரவுடி ஜானி கைது செய்யப்படும் தருவாயில் காட்பாடியில் உள்ள தனது மனைவியிடம் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசியுள்ளார். அதில் அவர் தன்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டவாறே ஓடியது பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரவுடி ஜானியை காவல் துறையினர் என்கவுண்ட்டர் செய்ய இருப்பதாகவும், ஜானியின் குடும்பத்தை சித்ரவதை செய்வதாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்;பாட்டம் நடத்தப்பட்டது. அவரது மனைவியும் தனது கணவரை காப்பாற்றக்கோரி காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்