
இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள பப்ஜி விளையாட்டு மீண்டும் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் 2-ஆம் தேதி இந்திய அரசு 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடைவிதித்தது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்குள்ளேயே பெரும்பாலான செயலிகள் ப்ளே ஸ்டோரிலிருந்து காணாமல் போயின. அதில் பிரபலமான ஆன்லைன் மல்டிப்ளேயர் விளையாட்டான பப்ஜியும் ஒன்று.

பப்ஜி விளையாட்டின் வன்முறை காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும் இதை நீக்குவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு. அதிக பயனர்களைக் கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த, தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் விடுத்து, தாமே முழு பொறுப்பையும் ஏற்கும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே தரவிறக்கம் செய்தவர்களுக்கு பப்ஜி பயன்பாட்டில் இருந்தது. இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டை 50 மில்லியனுக்கு அதிமானோர் விளையாடி வந்தனர். ஆனால் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் அக்டோபர் 30 முதல் இயங்காது என நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு.

இந்நிலையில் இந்தியாவுக்கான பப்ஜியின் புதிய வெர்ஷன் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தப் புதிய வெர்ஷனில் டென்செண்டின் தலையீடு இருக்காது. முழுக்க முழுக்க தென் கொரியாவை சேர்ந்த பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் இதை கையாளும். இதே போல, கொரியா, சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பிரத்யேக பப்ஜி வெர்ஷன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வெர்ஷன் வெளியிடுவது மட்டுமல்லாமல், இந்தியாவில் பப்ஜிக்கு தனி அலுவலகம், 100 பேருக்கு மேல் வேலை, உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டணி என பல்வேறு திட்டங்களுடன் புதிய அவதாரத்தில் பப்ஜி களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்